“அம்மா,அய்யா” என்ற குரல் கேட்டு வாசலுக்கு வந்தேன்.40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் நின்றிருந்தார்கள்.
“என்ன?” என்றேன்
“அய்யா, இந்த பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம் வெச்சிருக்கேன், மடிப்பிச்சை எடுத்து தாலி வாங்கி கல்யாணம் பண்றதா வேண்டுதல், அதனால ஒங்களால முடிஞ்ச உதவி பண்ணா நல்லாருக்கும்” என்றாள் மூத்த பெண்மணி.
பார்க்க பிச்சை எடுத்துப் பிழைக்கிற கூட்டமாகத் தெரியவில்லை. நல்ல உடை உடுத்தி பளிச் சென்று இருந்தார்கள். காதிலே கம்மலும், கழுத்திலே மெல்லிய சங்கிலியுமாக லேசான வசதியும் தெரிந்தது.
என்னுடைய மௌனத்தை எப்படிப் புரிந்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.
“அய்யா, தர விருப்பமில்லைன்னா பரவாயில்லை, நாங்க இருக்கப்பட்டவங்கதான், இந்த பொண்ணுக்கு கல்யாணமே அமையலைன்னு அம்மனுக்கு வேண்டிக்கிட்டேன்.அதான் இப்படி ஒரு நிலை” என்று அந்தப் பெண் நகர முயன்றாள்.
“இருங்க ,இருங்க”என்ற நான் உள்ளே சென்று ஒரு ஐம்பது ரூபாய்த் தாளைக் கொண்டு வந்து அவளிடம் தந்தேன். “இவ்வளவுதான் என்னால முடிஞ்சது” என்று ஏதோ ஒரு குற்றத்தைச் செய்து விட்டவனைப் போல சொன்னேன்.
“இது போதுங்கய்யா! உங்களுக்குப் புண்ணியம்,இது மாதிரி ஒரு பத்து வீட்ல கொடுத்தாங்கன்னா போதும்”, என்று தன் முந்தானையில் அதை ஏந்திக் கொண்டாள்.கைக்கூப்பி நகர்ந்தாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி கேட்டாள்,” கேட்டதும் தூக்கிக் கொடுத்திட்டீங்களே, அந்த பொம்பளே சொன்னதெல்லாம் நிஜம்னு நம்பிட்டீங்களா?”
“என்ன அப்படி கேட்டுட்டே, அவங்களப் பாத்தா ஏமாத்தற ஆளுங்க மாதிரியா இருக்கு?” என்ற எனக்குள் ஏமாந்து விட்டோமோ என்ற சந்தேகம் இப்போது எழுந்தது.
“இப்பல்லாம் இது ஒரு புது மாதிரியான பிச்சைங்க” என்ற என் மனைவி அது பற்றி மேலே பேசாமல் விட்டது எனக்கு நிம்மதியாக இருந்தது.
அடுத்த பத்து நாட்களில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடக்கும் என்று அப்போது நான் நினைக்கவில்லை.
வாசலிலே என் ஸ்கூட்டியைக் கழுவிக் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை நேரம்.
“சார்!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். பள்ளி மாணவன் போலத் தோற்றமளித்த ஒருவன் நின்றிருந்தான்.
“என்னப்பா?” என்று கேட்டேன்
கையில் வைத்திருந்த கோப்பிலிருந்து ஒரு காகித்தை எடுத்து நீட்டினான். கையைத் துடைத்துக் கொண்டு வாங்கிப் பார்த்தேன். ஏதோ ஒரு கல்லூரியிலிருந்து வந்த கடிதம். ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் கல்லூரிக் கட்டணம் கட்டச் சொல்லி வந்த நினைவூட்டல் கடிதம் அது.
“என்ன இதுக்கு?” என்றேன் புரியாமல்.
“சார்! நான் அப்பா இல்லாதவன் சார்! அம்மாதான் எல்லாம், அவங்ககளும் கூலி வேலை செய்றவங்க தான், நான் படிச்சி குடும்பத்தைக் காப்பத்துனாதான் உண்டு. முதல் வருஷ ஃபீஸ் கட்ட கொஞ்சம் பணம் கொறையுது. இது மாதிரி அங்க இங்க வாங்கி கொஞ்சம் சேத்துட்டேன். நீங்க உங்களால முடிஞ்ச உதவி பண்ணுங்க சார்” என்று கண்களில் ஒரு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்போடு என்னைப் பார்த்தான்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதை நம்புவதா இல்லையா என்று குழப்பம். ஒருவனின் எதிர்காலம் பற்றிய விஷயம் இது. என் மனைவி சொன்னது போல இது ஒரு புது மாதிரியான பிச்சையாக இருந்தால்?ஆனால் அவன் காட்டிய கடிதத்தில் ஏதும் தில்லு முல்லு இருப்பதாகவும் தெரியவில்லை.அவனுடைய முகத்தில் பொய் இல்லை. சரி உதவி செய்துதான் பார்ப்போம் என்று முடிவெடுத்தேன்.
வீட்டுக்குள் வந்து பணம் எடுக்கும் போது என் மனைவி என்னைப் பார்த்து” உங்களுக்கு என்ன புத்தி கெட்டுப் போச்சா? யார் வந்து கேட்டாலும் எந்த கேள்வியும் கேட்காம பணத்தைக் கொடுக்குறீங்க “ என்று கேட்டாள்
“பாவம் படிப்புன்னுதானே கேட்குறாங்க, உதவி பண்ணா என்ன தப்பு? இதான் கடைசி சரியா” என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவனிடம் முன்னூறு ரூபாயைக் கொடுத்தேன். “பேர் என்ன?” என்று கேட்டேன் “கண்ணன்” என்றான்.
என் கைப்பேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டு “ரொம்ப நன்றி சார், பீஸ் கட்டினதும் உங்களுக்கு போன் பண்றேன் சார்,” என்று சொல்லிவிட்டுப் போனான்.
சொன்னபடியே இரண்டு நாட்களில் போன் செய்தும் சொன்னான். பாத்தியா என்று என் மனைவியிடம் சொல்ல அவள் என்னைப் பார்த்த பார்வையின் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.
இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் ஆதம்பாக்கத்தில் உள்ள என் நண்பர் ஒருவரின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.வாசலில் யாரோ “சார்” என்று குரல் கொடுத்தார்கள். வெளியே வந்து பார்த்தால் என் வீட்டுக்கு வந்த அதே பெண்கள்.
“என்ன?” என்றார் என் நண்பர். என்னிடம் ஒப்புவித்த அதே கதையை மாறாமல் சொன்னாள் அவள். “இல்ல, இல்ல, இது மாதிரி விஷயத்துக்கெல்லாம் நான் ஹெல்ப் பண்றதில்லே, கிளம்புங்க” என்றார் அவர்.எனக்குள் பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டேன். அந்த பெண்ணைக் கூப்பிட்டு கேட்டு விடலாமா என்றும் கூட எண்ணம் வந்தது.
அவர்கள் போனதும் கேட்டேன் ஒன்றும் புரியாதவன் போல, “ஏதாவது கொடுக்க வேண்டியதுதானே?”
“நீ வேற விஷயம் புரியாம இது எல்லாம் பொய் வேஷம் நம்மகிட்ட காசு வாங்கிட்டுப் போய் தண்ணி அடிச்சிட்டு சினிமா பாப்பாங்க! இவங்களுக்கு உதவுறது பைத்தியக்காரத்தனம்” என்றார் அவர்.புத்திசாலி!
அவரிடம் நான் பைத்தியம் ஆன கதையைச் சொல்லவில்லை. என் மனைவியிடமும் இது பற்றி பிரஸ்தாபிக்கவில்லை.ஏனோ கண்ணனைப் பற்றி அந்நேரம் நினைப்பு வந்தது.
ஒரு நாள் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. கண்ணன்தான் பேசினான். அவனைப் பேச விடாமல் “இதோ பார் பணம் கிணம்னு வந்து நிக்காதே இதோட நிறுத்திக்கோ சரியா? ஃபிராட்ஸ்” என்று கத்தி விட்டு போனை வைத்தேன்.என்னை அப்படிப் பேச வைத்து அந்தப் பெண்கள் என்பது எனக்குப் புரிந்தது.
ஆறு மாதம் கழித்து ஒரு நாள் திருமணம் ஒன்றில் கலந்துக் கொள்ள திருத்தணி சென்றிருந்தோம். எல்லாம் முடித்துக் கொண்டு பேருந்து நிலையத்தில் காத்திருக்கிற நேரத்தில் காபி சாப்பிடலாம் என்று ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தோம்.
“என்ன சாப்பிட்றீங்க சார்?” என்று என் எதிரில் வந்து நின்றவன் கண்ணன். “நீ...?” என்று இழுத்தேன். அவனும் என்னை அடையாளம் கண்டு கொண்டான்.
“சார், இது பார்ட் டைம் ஜாப் சார், எனக்கு படிக்க அரசாங்கத்திலிருந்து ஸ்காலர்ஷிப் கிடைச்சிடுச்சி சார், அதைச் சொல்லத்தான் உங்களுக்குப் போன் செஞ்சேன் சார்! நீங்க அன்னைக்கு என்ன நிலையில இருந்தீங்கன்னு தெரியல சார்! சரி நேர்ல வந்து சொல்லலாம்னு இருந்தேன் சார், என்ன சாப்பிட்றீங்க சார் ?”என்றான்
காபி சாப்பிட்டு விட்டு அவனை வாழ்த்தி விட்டு நூறு ரூபாயை அவனிடம் கொடுத்தேன்.
“வேண்டாம் சார்” என்று மறுத்து விட்டான்.
வெளியே வந்து என் மனைவியிடம்,” பாத்தியா அன்னைக்கு என்னமோ சொன்னியே, வாழ்க்கையில மனுஷாளுங்க பேர்ல கொஞ்சம் நம்பிக்கை வைக்கணும், அந்த பொண்ணுக்கும் இந்நேரம் கல்யாணம் ஆகியிருக்கும் இல்ல? என்றேன்.
“ஆமால்ல?” என்றாள் அவள்.
“ஆமாவா? இல்லையா? ஏதாவது ஒன்னு சொல்லு”, என்று சிரித்தேன் நான்.
Saturday, November 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)

very good stories. They have copy right.
ReplyDeletemurugesan